G.029
இது 2010-இல் எழுதப்பட்டது.
2010-01-17
G.29 - பாவை விளக்குமாறு - (வக்கிரோக்தி)
------------
(பதின்சீர் விருத்தம் - மா மா மா மா தேமா - அரையடி வாய்பாடு)
பாவை விளக்கு மாறு வேண்டி நின்றேன்
.. பார்த்தார் புலவர் ஏனோ உடனே ஏற்றும்
பாவை விளக்கு மாறு தந்து விட்டார்
.. பாரீர் இஃதென் என்றேன் அருகி ருந்த
பாவை தன்னை விளக்கல் ஏனோ என்றார்
.. பரிதா பங்கொண்(டு) அளித்தாள் அன்னார் பெற்ற
பாவை விளக்கு மாறும் பதுமை யுந்தான்
.. பாரீர் பாட்டை எண்ணிக் கலங்கி னேனே.
சொற்பொருள்:
பாவை - 1. செய்யுளை; (பா - பாட்டு); 2. பொம்மை; பிரதிமை; 3. அழகிய பெண்;
விளக்குதல் - 1. தெளிவாக்குதல் (To make clear; to explain, elucidate); 2. துலக்குதல் (To clean, brighten, polish);
விளக்குமாறு - 1. விளக்கும்படி; 2. துடைப்பம்; 3. ஆறு விளக்குகள்;
பாவைவிளக்கு - பிரதிமை விளக்கு (Lamp with a damsel-shaped stand);
பாரீர் - 1. பாருங்கள்; 2. உலகோரே;
பாட்டை - 1. பாடலை; 2. நிலைமையை; துன்பத்தை;
பாவை விளக்குமாறு வேண்டி நின்றேன் - "பாவை விளக்குமாறு வேண்டுகிறேன்" என்றேன் - பாடலைத் தெளிவாக விளக்கும்படிக் கேட்டேன்.
பார்த்தார் புலவர்; ஏனோ உடனே ஏற்றும் பாவை-விளக்கும் ஆறு தந்துவிட்டார் - என்னைப் பார்த்த புலவர் என்ன காரணத்தாலோ உடனே தீபம் ஏற்றும் ஆறு பிரதிமை-விளக்குகள் தந்தார். (--அல்லது-- என் வேண்டுகோளை ஏற்றாலும், என்ன காரணத்தாலோ ஆறு பிரதிமைவிளக்குகள் தந்தார்).
பாரீர் இஃது என் என்றேன் - "பாருங்கள்! இது என்ன?" என்றேன். ("நான் சொன்னது ஒன்று; நீங்கள் செய்தது வேறொன்றாக இருக்கிறதே" என்ற பொருளில்);
அருகு இருந்த பாவை-தன்னை விளக்கல் ஏனோ என்றார் - பக்கத்தில் இருக்கும் இந்தப் பிரதிமையைப் பற்றி விளக்கமும் தேவையோ என்றார். (--அல்லது-- இப்பிரதிமையை ஏன் துலக்கவேண்டும் என்றார்).
பரிதாபங்கொண்டு அளித்தாள் அன்னார் பெற்ற பாவை விளக்குமாறும் பதுமையுந்தான் - என்மேல் இரங்கி அவர் மகள் எனக்குத் துடைப்பமும் பொம்மையும் தந்தாள்.
பாரீர் பாட்டை எண்ணிக் கலங்கினேனே - உலகோரே! என் நிலைமையை எண்ணிக் கலங்கினேன். (--அல்லது-- பாடலின் பொருள் உணராமையை எண்ணிக் கலங்கினேன்).
வி. சுப்பிரமணியன்
------------- -------------
அருமையோ்அருமை
ReplyDeleteThank you.
Delete