Tuesday, June 9, 2026

G.30 - முருகன் - மரம் - சிலேடை

G.030

து 2010-இல் எழுதப்பட்டது.


2010-01-29

G.30 - முருகன் - மரம் - சிலேடை

------------

வள்ளி அணைத்தலால் வான்வந் தடைவதால்

புள்ளமர் பொற்பினால் போற்றுவார்க் - கள்ளிக்

கொடுப்பதால் தன்னடிக்கண் கூடினார் துன்பம்

தடுப்பதால் கந்தன் தரு.


சொற்பொருள்:

வள்ளி - 1. கொடி; / 2. குறவர் மகளான வள்ளி;

அணைத்தல் - தழுவுதல்;

வான் - 1. மேகம்; / 2. தேவர்கள்;

அடைதல் - 1. சேர்தல்; / 2. சரண்புகுதல்;

புள் - 1. பறவை; / 2. மயில்;

அமர்தல் - 1. உட்கார்தல்; 2. விரும்புதல்;

பொற்பு - 1. தன்மை; / 2. அழகு;

போற்றுதல் - 1. பாதுகாத்தல்; வளர்த்தல் / 2. துதித்தல்; வணங்குதல்;

அடி - 1. கீழ்; / 2. திருவடி;

தரு - மரம்;


மரம்:

வள்ளி அணைத்தலால் - கொடிகள் தழுவிப் படர்வதால்;

வான் வந்து அடைவதால் - மேகம் வந்து பொருந்துமாறு ஓங்கி வளர்வதால்;

புள் அமர் பொற்பினால் - பறவைகள் (கிளைகளில்) உட்காரும் தன்மையால்;

போற்றுவார்க்கு அள்ளிக் கொடுப்பதால் - பராமரிப்பவர்களுக்குப் பெரும்பயனைத் தருவதால்;

தன் அடிக்கண் கூடினார் துன்பம் தடுப்பதால் - தன் அடியில் சேர்பவர்களுக்கு வெயிலின் துன்பத்தைத் தடுத்துக் குளுமை தருவதால்;

தரு - ஒரு மரம்;


முருகன்:

வள்ளி அணைத்தலால் - குறமகள் வள்ளி தழுவுவதால்;

வான் வந்து அடைவதால் - தேவர்கள் வந்து சரண்புகுவதால்;

புள் அமர் பொற்பினால் - மயிலை வாகனமாக விரும்பி ஏறுவதால்;

போற்றுவார்க்கு அள்ளிக் கொடுப்பதால் - வணங்குபவர்களுக்கு வரங்களை அள்ளித் தருவதால்;

தன் அடிக்கண் கூடினார் துன்பம் தடுப்பதால் - தன் திருவடியில் சேர்பவர்களுக்கு (வினை, நோய், முதலிய) துன்பங்களைத் தீர்த்து அருள்வதால்;

கந்தன் - முருகன்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment

G.32 - தமிழ்ப் புத்தாண்டு - "சார்வரி" (Śārvarī)

G.032 இப்பாடல் 2020- இல் எழுதப்பட்டது . 2020-04-13 G.32 - தமிழ்ப் புத்தாண்டு - " சார்வரி " (Śārvarī ) ------------ 1...