G.030
இது 2010-இல் எழுதப்பட்டது.
2010-01-29
G.30 - முருகன் - மரம் - சிலேடை
------------
வள்ளி அணைத்தலால் வான்வந் தடைவதால்
புள்ளமர் பொற்பினால் போற்றுவார்க் - கள்ளிக்
கொடுப்பதால் தன்னடிக்கண் கூடினார் துன்பம்
தடுப்பதால் கந்தன் தரு.
சொற்பொருள்:
வள்ளி - 1. கொடி; / 2. குறவர் மகளான வள்ளி;
அணைத்தல் - தழுவுதல்;
வான் - 1. மேகம்; / 2. தேவர்கள்;
அடைதல் - 1. சேர்தல்; / 2. சரண்புகுதல்;
புள் - 1. பறவை; / 2. மயில்;
அமர்தல் - 1. உட்கார்தல்; 2. விரும்புதல்;
பொற்பு - 1. தன்மை; / 2. அழகு;
போற்றுதல் - 1. பாதுகாத்தல்; வளர்த்தல் / 2. துதித்தல்; வணங்குதல்;
அடி - 1. கீழ்; / 2. திருவடி;
தரு - மரம்;
மரம்:
வள்ளி அணைத்தலால் - கொடிகள் தழுவிப் படர்வதால்;
வான் வந்து அடைவதால் - மேகம் வந்து பொருந்துமாறு ஓங்கி வளர்வதால்;
புள் அமர் பொற்பினால் - பறவைகள் (கிளைகளில்) உட்காரும் தன்மையால்;
போற்றுவார்க்கு அள்ளிக் கொடுப்பதால் - பராமரிப்பவர்களுக்குப் பெரும்பயனைத் தருவதால்;
தன் அடிக்கண் கூடினார் துன்பம் தடுப்பதால் - தன் அடியில் சேர்பவர்களுக்கு வெயிலின் துன்பத்தைத் தடுத்துக் குளுமை தருவதால்;
தரு - ஒரு மரம்;
முருகன்:
வள்ளி அணைத்தலால் - குறமகள் வள்ளி தழுவுவதால்;
வான் வந்து அடைவதால் - தேவர்கள் வந்து சரண்புகுவதால்;
புள் அமர் பொற்பினால் - மயிலை வாகனமாக விரும்பி ஏறுவதால்;
போற்றுவார்க்கு அள்ளிக் கொடுப்பதால் - வணங்குபவர்களுக்கு வரங்களை அள்ளித் தருவதால்;
தன் அடிக்கண் கூடினார் துன்பம் தடுப்பதால் - தன் திருவடியில் சேர்பவர்களுக்கு (வினை, நோய், முதலிய) துன்பங்களைத் தீர்த்து அருள்வதால்;
கந்தன் - முருகன்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment