G.032
இப்பாடல் 2020-இல் எழுதப்பட்டது.
2020-04-13
G.32 - தமிழ்ப் புத்தாண்டு - "சார்வரி" (Śārvarī)
------------
1) --- (அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" - அரையடி வாய்பாடு) ---
சார்வரி ஆண்டு தன்னில் .. தரணியிக் கொரோனாத் துன்பம்
தீர்வுற அருள வேண்டும் .. திருமுடி மீது கங்கை
நீர்வரி அரவு திங்கள் .. நிலைபெற வைத்த தேவா
கூர்வடி வேலன் தன்னைக் .. கொடுத்தகண் ணுதலெம் மானே.
சார்வரி ஆண்டு-தன்னில் தரணி இக்-கொரோனாத் துன்பம் தீர்வுற அருள-வேண்டும் - சார்வரி வருடத்தில் உலகம் இந்தக் கொரோனா வைரஸ் (Covid-19) என்ற துன்பம் தீர்ந்து உய்ய அருள்வாயாக;
திருமுடிமீது கங்கைநீர் வரிஅரவு திங்கள் நிலைபெற வைத்த தேவா - தலைமீது கங்கைநதி, வரிகள் திகழும் பாம்பு, சந்திரன் இவற்றை அணிந்த தேவனே;
கூர்வடிவேலன்-தன்னைக் கொடுத்த கண்ணுதல் எம்மானே - கூரிய வேலை ஏந்தும் முருகனை அருளிய நெற்றிக்கண்ணை உடைய எம்பெருமானே. (வடி - கூர்மை; கூர்வடி - ஒருபொருட்பன்மொழி);
2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
கார்வரி, ஈட்டிய காசுவரி, வீட்டுவரி,
நீர்வரி, இருக்கின்ற நிலவரி, என்றுமிகச்
சேர்வரி கண்டிங்கியாம் திகைக்கின்றோம்; வந்தடைந்த
சார்வரி நீயேனும் தாவெமக்கு நிம்மதியே.
கார்வரி, ஈட்டிய காசுவரி, வீட்டுவரி, நீர்வரி, இருக்கின்ற நிலவரி - காருக்கு வரி, சம்பாதித்த வருமானத்துக்கு வரி, வீட்டுக்கு வரி, நீருக்கு வரி, நிலத்துக்கு வரி;
என்று மிகச் சேர்-வரி கண்டு இங்கு யாம் திகைக்கின்றோம் - என்று பற்பல வரிகளைக் கண்டு நாங்கள் தளர்கின்றோம்; (கண்டிங்கியாம் = கண்டு இங்கு யாம்; குற்றியலிகரம்);
வந்து அடைந்த சார்வரி நீயேனும் தா எமக்கு நிம்மதியே - வந்து சேர்ந்த சார்வரி வருஷமே, நீயாவது எங்களுக்கு நிம்மதியைத் தா;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment