G.031
இப்பாடல் 2010-இல் எழுதப்பட்டது.
2010-03-20
G.31 - தேடித் தேடி - கவியரங்கம் 31
------------
0-1) -- கடவுள் வாழ்த்து --
தேடித் தேடி இருவரன்று
.. திகைத்து நிற்க உயர்தீயே!
ஆடிப் பாடி அடிபோற்றும்
.. அன்பர் உள்ளே உறைவாயே!
நாடிக் கைகள் குவித்தேனே
.. நானும் உன்னைத் தமிழ்கொண்டு
பாடிப் பாதம் பணிந்தேனே
.. பார்த்த ருள்வாய் பசுபதியே!
1) -- நாலடி தரவு கொச்சகக் கலிப்பா ---
மூவாண்டு முடிவடையும் முன்னமே இவ்வாண்டு
போவானெப் பள்ளியெனப் பொழுதெல்லாம் சிந்தித்தே
ஆவாவென் றல்லாடி அங்குமிங்கும் மிகத்தேடி
ஈவாரே பெரும்பொருளும் ஏதோவோர் பள்ளிக்கே.
இவ்வாண்டு - 1) இந்த வருடம்; 2) இந்த வாண்டு;
ஆவாவென்று - ஆ ஆ என்று;
2) -- கலிவிருத்தம் - 4 தேமா ---
ஆட்டம் பாட்டம் ஆர்க்கு வேண்டும்
நாட்டம் எல்லாம் ஏட்டின் மேலே
காட்டு வாயென் கண்ணே என்று
வீட்டில் சொல்வார் வேத வாக்காய்.
3) -- எண்சீர் விருத்தம் - 8 மா ---
'மண்டே' என்பார் திங்கள் என்னார்
.. வாழ வேற்று மொழியே தேவை
மண்டே என்பார் தமிழும் கற்றால்
.. மக்கட் காகக் காசைத் தந்தும்
கண்டார் காலில் விழுந்தும் ஏதோ
.. கல்லூ ரியிலே இடத்தை வாங்கிக்
கொண்டு வந்தி ருப்பார் இந்நாட்
.. கோலம் ஆவ(து) இஃதே அன்றோ.
மண்டு - மூடன்; (மண்டே - Monday);
இந்நாள் கோலம் - இக்கால நிலை;
4) --- அறுசீர் விருத்தம் - 6 மா ---
ஆசை விண்ணை எட்டும்
.. அதுவே ஆளை ஆட்டும்
காசைத் தருவ தொன்றே
.. கல்வி என்பார் இன்று
மாசை நீக்க எண்ணார்
.. வழியை என்றும் நண்ணார்
ஓசை ஒன்றே செய்வார்
.. உலகில் உழன்று தொய்வார்.
வழியை என்றும் நண்ணார் - நல்ல வழியை என்றும் சேரமாட்டார்கள்;
ஓசை ஒன்றே செய்வார் - பொருளற்ற பேச்சே பேசுவார்; அலம்பல் செய்வார்;
5) -- நாலடி தரவு கொச்சகக் கலிப்பா ---
வளர்கிறநாள் விளையாட்டே மனம்கருதும்; வலிமைமிகு
இளமையிலே இளமயிலே என்றென்றும் எண்ணத்தில்;
தளர்வடையும் முதுமையிலோ தாங்கொண்ணாத் தனுவலிதான்
உளம்நினையும்; உலகினிலே உளநாள்கள் இப்படியே;
இளமயில் - இளம் பெண்;
தனு - உடல்;
6) -- கலித்துறை? ---
படித்து முடித்து வேலை தேடிக் - காலைப்
பிடித்துப் பிடித்துப் பதவி தேடி - நாளும்
நடித்து நடித்துக் காசைத் தேடில் - வாழ்வை
முடிக்கத் துடிக்கும் நமனும் தேடு வானே.
7) -- அறுசீர் விருத்தம் - மா மா காய் ---
தேடி வந்த கூற்றுவனைச்
.. சீறி உதைத்த சேவடியைப்
பாடிப் பணிந்து மகிழ்கின்ற
.. பத்தர் குழாத்தை எந்நாளும்
கூடிக் களிக்க எண்ணாமல்
.. குவல யத்தில் வீணாக
ஓடிப் பேய்த்தேர் முகக்கின்றார்
.. உயிரை வளர்க்க அறியாரே.
பத்தர்குழாம் - அடியார்கூட்டம்;
குவலயம் - பூமி;
பேய்த்தேர் - கானல் நீர்;
முகத்தல் - மொள்தல்;
8) -- இன்னிசை வெண்பா ---
தேடுவது நம்மியல்பு; தேடற்குத் தக்கதை
நாடுவது நல்லறிவு; நாளெல்லாம் காசுக்கே
ஓடுவது புல்லறி(வு); உள்ளமொன்றி முக்கணனைப்
பாடுவதே உய்வுதரும் பார்.
புல்லறிவு - அறியாமை;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment