Friday, May 1, 2026

G.28 - என்னாடு - கவியரங்கம் 35

G.028

இப்பாடல் 2011-இல் எழுதப்பட்டது.


2011-08-07

G.28 - என்னாடு - கவியரங்கம் 35

------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)


1)

எதிர்கட் சியாளர் செய்ததுதான்

.. என்ன பன்னாள் சபையினிலே

குதிர்போல் ஒன்றும் செய்யாமல்

.. குந்தி இருந்த செயலொன்றே

புதிர்தான் அவரின் புரட்சியெலாம்

.. போடும் உங்கள் ஓட்டுகளை

எதிலும் வெல்லும் எம்தலைவர்

.. இவர்க்கே என்று மொழிவாரே.


எதிர்கட்சி - வினைத்தொகை - எம் கட்சியை எதிர்க்கும் கட்சி;


2)

பின்னிப் பின்னி வார்த்தைகளைப்

.. பேசிப் பேசிப் பெரிதுவப்பார்

கன்னித் தமிழைக் காக்கின்றோம்

.. காலம் கடந்த செம்மொழியே

என்ன செய்தார் எதிர்கட்சி

.. எனவே ஓட்டை எமக்களிப்பீர்

இன்னும் செய்வோம் இதுபோல

.. என்றே மாற்றம் மொழிவாரே.


காலம் கடந்த - காலத்தைக் கடந்த; காலாவதியான;

ஓட்டை - குடவோலையை (=வாக்கு = vote); பயனற்ற (any cracked article);

என்றேமாற்றம் - என்றே மாற்றம் / என்று ஏமாற்றம்;

மாற்றம் - வார்த்தை;


3)

பேரூ ராட்சி பிடித்துவிட்டோம்

.. பிறகு கோட்டை பிடிப்போமே

ஊரூ ராகப் பிரசாரம்

.. ஒலியும் காதைப் பிளந்திடுமே

ஆரூ ரெனினும் நிலையிதுவே

.. ஆட்சிக் காக நாடெங்கும்

காரூர் பணமும் கைம்மாறும்

.. கறையில் லாத கரமென்பார்.


ஆரூர் எனினும் - ஆர் ஊர் எனினும் - எந்த ஊராக இருந்தாலும்;

கார் - கருமை;

கார் ஊர் பணம் - கறுப்புப் பணம்; (ஊர்தல் - ஏறுதல்; பரவுதல்);

கைம்மாறுதல் - கைகள் மாறும்;

கறை - மாசு; குற்றம்; கறுப்பு;


4)

என்றும் நாங்கள் மறவோமே

.. எங்கள் தலைவர் எப்போதும்

என்ற னாடே எனக்கெல்லாம்

.. என்று வாழும் எளிமையினார்

சென்ற காலத் திற்கூடச்

.. சிறுவ ராக இருந்தாலும்

ஒன்றை எண்ணும் அவருள்ளம்

.. ஓயா தென்னா டென்றென்றே.


5)

சும்மா உரைக்கும் சொல்லன்று

.. சூழ்ந்த கூட்டத் திடையெங்கோ

அம்மே என்ற ஒலிகேட்க

.. அங்கே சென்ற தவர்கவனம்

நம்மா டிங்கே என்றறிந்து

.. நாண மின்றி நவின்றாரே

அம்மாண் தலைவர் என்னாடே

.. ஆரும் தொடாதீர் அதையென்றே.


அம்மே - ஆடுகளின் ஒலிக்குறிப்பு;

அவர் கவனம் - தலைவரின் கவனம்;

மாண்-தலைவர் - பெருந்தலைவர்; (மாண்தல் - மாட்சிமைப்படுதல்);


6)

என்னா டென்னா டென்றுரைப்பார்

.. இவரே தலைவர் என்றென்றும்

இந்நாட் டைக்காத் துழைத்திடுவார்

.. என்ற எண்ணம் மாறியதே

முன்னாள் ஆடு மேய்த்திருந்த

.. முதன்மை எல்லாம் அறிந்தாலும்

என்னே செய்ய! தலைவரெலாம்

.. என்று மாடே தேடுவரே!


என்னாடு - என் நாடு / என் ஆடு;

என்றுமாடே தேடுவர் - என்றும் ஆடே தேடுவர்; என்றும் மாடே தேடுவர்;

மாடு - செல்வம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Saturday, January 17, 2026

G.27 - இலக்கணம் படுத்தும் பாடு (குறும்பா - Limerick)

G.027

வை 2019-இல் எழுதப்பெற்ற பாடல்கள்.


2019-02-10

G.27 - இலக்கணம் படுத்தும் பாடு (குறும்பா - Limerick)

=============

(Limerick)

(குறும்பா அமைப்பு.

அடிகள் 1, 2, 5 - காய் காய் மா - அடியுள் வெண்டளை. ஓர் எதுகை. அடி ஈற்றில் இயைபு.

அடிகள் 3, 4 - காய் காய் - அடியுள் வெண்டளை. ஓர் எதுகை. அடி ஈற்றில் இயைபு.)


1)

இலக்கணமென் றால்நடுங்கார் ஆரே

கலக்கமது தீர்வழிகா ணாரே

.. புத்தகங்கள் வாசித்தும்

.. நித்தமிக யோசித்தும்

இலக்குதனை என்றுமடை யாரே.


பதம் பிரித்து:

இலக்கணம் என்றால் நடுங்கார் ஆரே?

கலக்கமது தீர்-வழி காணாரே;

.. புத்தகங்கள் வாசித்தும்,

.. நித்த(ம்)மிக யோசித்தும்,

இலக்குதனை என்றும் அடையாரே!


2)

எட்டியுமி லக்கணமும் ஒக்கும்

விட்டுவிட நெஞ்சமும்து டிக்கும்

.. .. புணர்ச்சியெனில் அச்சமென்றோர்

.. .. உணர்ச்சியெழும் இல்லைவென்றோர்

நட்டலும்க னாவினில்ந டக்கும்.


எட்டியும் இலக்கணமும் ஒக்கும் - இலக்கணம் எட்டிக்காய் போல் கசப்பது;

புணர்ச்சி எனில் அச்சம் என்று ஓர் உணர்ச்சி எழும் - புணர்ச்சி விதிகள் என்றால் பயமே தோன்றும்;

இல்லை வென்றோர் - (அதனை) வென்றவர்கள் இல்லை;

நட்டலும் கனாவினில் நடக்கும் - இலக்கணத்தை விரும்புவது கனவில்தான் நிகழும்!


3)

அல்வழிப்பு ணர்ச்சியென்ற போதே

நல்விழிப்பு ணர்ச்சியும்தங் காதே

.. .. தலைகீழாய் நின்றாலும்

.. .. இலையாவும் தின்றாலும்

வெல்வழியைக் காணுதலா காதே.


அல்வழிப்புணர்ச்சி என்ற போதே - "அல்வழிப் புணர்ச்சி" என்ற சொல்லைக் கேட்டதுமே;

நல் விழிப்பு உணர்ச்சியும் தங்காதே - உறக்கம் வந்துவிடும்;

தலைகீழாய் நின்றாலும் - பெருமுயற்சி செய்தாலும்;

இலை யாவும் தின்றாலும் - நினைவாற்றலுக்காகப் பல பச்சிலைகளை உண்டாலும்;

வெல்-வழியைக் காணுதல் ஆகாதே - இலக்கணத்தை வெல்லும் வழியைக் காண முடியாதே.


4)

வினைத்தொகைக்குக் காட்டூறு காயே

அனைத்துலக நூல்களில்பார்ப் பாயே

.. .. தயிர்ச்சோற்றின் நற்றுணையே

.. .. பயில்வோர்க்கும் பொற்றுணையே

மனத்திலிடும் மந்திரமாய் வாயே.


வினைத்தொகைக்குக் காட்டு ஊறுகாயே - வினைத்தொகைக்கு உதாரணம் ஊறுகாய்;

அனைத்து உலக நூல்களில் பார்ப்பாயே - எல்லா இலக்கண நூல்களிலும் இதே உதாரணத்தைக் காணலாம்;

தயிர்ச்சோற்றின் நற்றுணையே - தயிர்ச்சோற்றுக்கு ஏற்றது ஊறுகாய்;

பயில்வோர்க்கும் பொற்றுணையே - கற்போர்க்கும் இது பொன் போன்றது;

மனத்திலிடும் மந்திரம் ஆய்வாயே - இதுவே (தேர்வுகளில்) காக்கும் மந்திரம் என்று உணர்வாயாக!


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.28 - என்னாடு - கவியரங்கம் 35

G.028 இப்பாடல் 2011- இல் எழுதப்பட்டது . 2011-08-07 G.28 - என்னாடு - கவியரங்கம் 35 ------------ ( அறுசீர் விருத்தம் - மா மா காய் ...