Tuesday, May 21, 2024

G.8 - பொழுதுபோக்கு - கவியரங்கம் 43

G.008

இப்பாடல் 2016-இல் எழுதப்பட்டது.

I wrote 2 sets of songs for this kaviyarangam at that time. This is the second set.


சந்தவசந்தக் கவியரங்கம் - 43

"எனக்குப் பிடித்த தலைப்பு" (எத்தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம்)


2016-06-07

G.8 - பொழுதுபோக்கு - கவியரங்கம் 43

-----------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" - அரையடி வாய்பாடு)


0-1) ---- இறைவணக்கம் ----

தொழுதிட எண்ணா என்னைத் தொழுதிட வைக்கும் தூயா

எழுதிட எண்ணா என்னை எழுதிட வைக்கும் ஈசா

கழுதுகள் உலவு கின்ற காட்டிடை நடஞ்செய் நாதா

மழுவினை ஏந்தெம் மானே மாதொரு பங்கா போற்றி.


கழுது - பேய்;


0-2) ---- அவைவணக்கம் ----

முழுமுதல் ஈசன் தன்னை முன்னடி போற்றி இங்குக்

குழுமிய அவையோ ருக்குக் கூப்பினேன் என்க ரங்கள்

விழுமிய பாட லெல்லாம் விருப்பொடு கேட்கும் காதீர்

உழுதசால் உழும்பண் பேன்என் உரையையும் பொறுக்க இன்று.


(அப்பர் தேவாரம் - 5.90.8 - "உழுத சால்வழியே உழுவான்பொருட்டு இழுதை நெஞ்சமிது என் படுகின்றதே");


1) ---- பொழுதுபோக்கு ----

காலையில் எழுந்து காப்பி கையினில் ஏந்திச் சன்னல்

மூலையில் அமர்ந்து செய்தி முரசறை தாளை ஓதிச்

சாலையில் வருவார் போவார் தங்களைக் கண்கா ணிக்கும்

வேலையில் பொழுது போக்க விரும்புவார் சிலருள் ளாரே.


2)

கட்சியின் கொடியைக் கண்டு கைகளைக் குவித்து நிற்பார்

அச்சமே இல்லை என்பார் அங்கொரு தலைவர் வந்தால்

நிச்சயம் காலில் வீழ்வார் நேர்மையின் சிகரம் என்று

மெச்சிமெய் குளிர்வார் நம்மூர் வீதியில் காணும் ஒன்றே.


3)

கட்டிய கணவன் உண்ணக் காத்திருந் தாலும் தோளைத்

தட்டிய ழைத்த போதும் சற்றும றிந்தி லாள்அப்

பெட்டியில் ஓடு கின்ற பெருந்தொடர் மூழ்கம் மாது

திட்டியும் திருந்தாள் என்னே சிலரது பொழுது போக்கு.


4)

அரைத்ததை மீண்டும் மீண்டும் அரைக்கிற படங்கள் பார்த்துத்

திரைப்பட நடிகர் கட்குச் செய்கிறார் பால்மு ழுக்கே

உரைப்பதும் அவர்பு கழ்ச்சி ஒட்டுவ தவர்ப டங்கள்

கரைப்பது காசி னோடு காலமும் உணர்கி லாரே.


5)

பொழுதினைப் போக்க என்று புவியினில் மாந்தர் செய்யும்

பழுதுகள் எண்ணிப் பார்த்தால் பற்றிடும் அச்சம் பாட்டை

எழுதிடும் போதென் னுள்ளும் எழுந்திடக் கண்டேன் ஆரே

வழுவிலாப் பொழுது போக்கின் வகைதனை எடுத்து ரைப்பார்?


6)

நாட்டினை வளப்ப டுத்த நம்மியல் பிற்கு கந்த

காட்டுகள் முன்னோர் செய்து காட்டியுள் ளார்கள் நல்ல

பாட்டுகள் பாடி நூல்கள் பயின்றவை பயிற்று வித்தூர்

வாட்டம ழித்து வாழ்தல் மாசிலாப் பொழுது போக்கே.


பதம் பிரித்து:

நாட்டினை வளப்படுத்த நம் இயல்பிற்கு உகந்த

காட்டுகள் முன்னோர் செய்துகாட்டியுள்ளார்கள்; நல்ல

பாட்டுகள் பாடி, நூல்கள் பயின்று, அவை பயிற்றுவித்து, ஊர்

வாட்டம் அழித்து வாழ்தல் மாசு இலாப் பொழுதுபோக்கே.


(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.21.8 -

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.)


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...