G.007
இப்பாடல் 2016-இல் எழுதப்பட்டது.
I wrote 2 sets of songs for this kaviyarangam at that time. This is the first set.
சந்தவசந்தக் கவியரங்கம் - 43
"எனக்குப் பிடித்த தலைப்பு" (எத்தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம்)
2016-05-21
G.7 - எத்தலைப்பில் எழுதுவது? - கவியரங்கம் 43
----------------------------------------------
(கலிவிருத்தம் - "தானா தனதானா தானா தனதானா" என்ற சந்தம்)
(மா மாங்காய் மா மாங்காய்)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே")
0-1) ---- இறைவணக்கம் ---
தலைப்பை யரவோடு தண்ணார் மதிசூடீ
உலப்பில் பெருமானே உம்பர்க் கொருகோனே
மலைக்கு மகள்நாதா மழுவாள் உடையாயென்
மலைப்பை அறுவித்து வானம் அருளாயே.
தலைப் பையரவோடு தண் ஆர் மதி சூடீ - தலையில் படம் உடைய நாகப்பாம்போடு குளிர்ந்த பிறைச்சந்திரனையும் அணிந்தவனே; (பை - பாம்பின் படம்);
உலப்பு இல் பெருமானே - அழிவற்றவனே; (உலப்பு - அழிவு; சாவு);
உம்பர்க்கு ஒரு கோனே - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவனே; (உம்பர் - தேவர்);
மலைக்கு மகள் நாதா - உமைக்குக் கணவனே; (மலைக்கு மகள் - மலைமகள் - உமை)
மழுவாள் உடையாய் - மழுவாயுதத்தை ஏந்தியவனே;
என் மலைப்பை அறுவித்து வானம் அருளாயே - என் அறிவுமயக்கத்தைத் தீர்த்து நற்கதி அருள்வாயாக; (அறுவித்தல் - அறுத்தல் - இல்லாமற்செய்தல்; நீக்குதல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.62.8 - "மாசார் பாச மயக்கு அறுவித்து எனுள்" - மாசு ஆர் - குற்றம் பொருந்திய. பாசமயக்கு - ஆசையாகிய மயக்கத்தை. அறுவித்து - நீங்கச்செய்து.);
0-2) --- அவைவணக்கம் ---
தலைப்புத் தருபோதும் சங்கை மிகவாகி
அலைப்புண் நிலையேனான் அதுவும் இலையென்றால்
இலக்குத் தெரியாதே எழுத முயல்வேன்தன்
கலக்கம் அளவில்லை காணீர் அவையீரே.
தலைப்புத் தருபோதும் சங்கை மிக ஆகி - தலைப்பைத் தந்தபொழுதும் சந்தேகம்/அச்சம் மிக ஆகி; (தருபோதும் - வினைத்தொகை - தந்த போதும்); (சங்கை - ஐயம்; அச்சம்);
அலைப்பு உண் நிலையேன் நான் - வருந்துகின்ற நிலையை உடைய நான்; (அலைப்பு - வருத்தம்; அலைப்பு உண்ணுதல் - வருத்தம் அடைதல்);
1)
கலவ மயிலன்னார் காதல் கவினாரும்
நிலவு கதிர்சாயும் நேரம் கடல்சூழ்ந்த
உலகை அரசாள்வோர் ஊழல் எனநாளும்
பலரும் சலியாமற் பாக்கள் புனைகின்றார்.
பதம் பிரித்து:
கலவ மயில் அன்னார் காதல், கவின் ஆரும்
நிலவு, கதிர் சாயும் நேரம், கடல் சூழ்ந்த
உலகை அரசு ஆள்வோர் ஊழல், என நாளும்
பலரும் சலியாமல் பாக்கள் புனைகின்றார்
கலவமயில் அன்னார் - தோகைமயில் போன்ற பெண்கள்;
கதிர் - சூரியன்;
சலியாமல் - சலித்தல் இன்றி; (சலித்தல் - 1. சோர்தல்; 2. To sift; சல்லடையாற் சலித்தல்);
2)
மண்ணிற் பலகோடி மாக்கள் உயிர்வாழ்ந்து
மண்ணில் மறைகின்ற வண்ணம் அதுகண்டோம்
எண்ணிற் புனைபாவின் எல்லை எதுவென்று
திண்ணம் உணர்வோமேல் செப்பல் தெளிவாமே.
மாக்கள் - விலங்குகள்; மனிதர்கள்;
எண்ணில் புனை பாவின் எல்லை எது என்று திண்ணம் உணர்வோமேல் - சிந்தித்தால், புனைகின்ற பாக்களின் கால அளவு எது என்று உறுதியாக உணர்ந்தோம் என்றால்;
செப்பல் தெளிவு ஆம் - நாம் சொல்வதில் (இயற்றும் பாக்களில்) தெளிவு உண்டாகும்;
3)
கற்றைப் பணம்நாடிக் காலம் கழியாமல்
வெற்றுக் கவிபாடி விழலுக் கிறையாமல்
வெற்றிக் கொடிமீது விடையை உடையான்தாள்
பற்றிப் புகழ்மாலை பாடிப் பணிவோமே.
காலம் கழியாமல் - காலத்தைப் போக்காமல்;
விழலுக்கிறையாமல் - வீணே பாடுபடாமல்; பயனற்ற செயலில் ஈடுபடாமல்;
வெற்றிக் கொடிமீது விடையை உடையான் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவன்;
உடையான் தாள் பற்றிப் புகழ்மாலை பாடி - இறைவன் திருவடியைப் பிடித்துத் துதிகள் பாடி; இறைவன் திருவடியைக் குறித்துப் பாமாலைகள் பாடி; (பற்றி - 1. பிடித்து (பற்றுதல்); 2. குறித்து));
4)
ஆற்றுச் சடையின்மேல் அரவும் அணிதிங்கட்
கீற்றும் புனையீசன் கேடில் மலைபேர்த்தான்
போற்ற விரலூன்றிப் புகழார் பெயரீந்த
ஏற்றன் தனைநாமும் ஏத்தி மகிழ்வோமே.
ஆற்றுச் சடையின்மேல் அரவும் அணி திங்கட் கீற்றும் புனை ஈசன் - கங்கையை இருக்கும் சடையின்மேல் பாம்பையும் அழகிய பிறைச்சந்திரனையும் அணிந்த ஈசனது;
கேடு இல் மலை பேர்த்தான் போற்ற விரல் ஊன்றிப் புகழ் ஆர் பெயர் ஈந்த - அழியாத கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் தன்னைப் போற்றுமாறு ஒரு திருப்பாத விரலை ஊன்றி நசுக்கிப், பின் அவனுக்கு இராவணன் என்ற புகழ்மிக்க பெயரைக் கொடுத்த;
ஏற்றன்தனை நாமும் ஏத்தி மகிழ்வோமே - இடபவாகனனான சிவபெருமானை நாமும் துதித்து இன்புறுவோம்; (ஏற்றன் - இடபவாகனன்);
5)
தொழுத இமையோர்க்குச் சுதையை அருளீசன்
பழுதில் பெருமான்றன் பாதம் தனையுன்னி
எழுதில் தெளிவாகும் எண்ணம் அதனாலே
பழுதை தனையென்றும் பாம்பா நினையோமே
சுதை - அமுதம்;
பழுது இல் பெருமான் - குற்றமற்ற பெருமான்;
உன்னி - நினைத்து; சிந்தித்து;
எழுதில் - எழுதினால்;
பழுதைதனை என்றும் பாம்பா நினையோமே - பழுதையைப் பாம்பாக நினைக்கமாட்டோம்; (பழுதை - கயிறு; வைக்கோற்புரி);
6)
வேலைப் பளுவென்றும் வேளை இலையென்றும்
ஆலைப் படுகன்னல் அதுவாய்த் தினமோடிக்
கோலைப் பிடிகாலம் குறுகா முனமீசன்
காலைப் பணிவோமேல் காலன் பிடியானே.
பளு / பளுவு - கனம்; சுமை;
வேளை - பொழுது; காலம்;
கன்னல் - கரும்பு;
கோல் - கம்பு; ஊன்றுகோல்;
குறுகுதல் - அணுகுதல்; நெருங்குதல்;
ஆலைப் படு கன்னல் அது ஆய் - கரும்பாலையில் நசுக்கப்படும் கரும்பு போல ஆகித் துன்புற்று;
தினம் ஓடிக் கோலைப் பிடி காலம் குறுகாமுனம் - நாள்கள் சென்று, மூப்பு அடைந்து, ஒரு கைத்தடியைப் பிடிக்கும் காலம் வந்தடைவதன் முன்னமே;
ஈசன் காலைப் பணிவோமேல் - ஈசன் திருவடியை நாம் வணங்கினால்;
காலன் பிடியானே - நம்மைக் காலன் பிடிக்கமாட்டான்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment