Monday, March 4, 2024

G.6 - Year 2020 - கவியரங்கம்

G.006

இப்பாடல் 2007-இல் எழுதப்பட்டது.

This may provide some entertainment - the folly (or uncanny insight) of predictions! :)


சந்தவசந்தக் கவியரங்கம் - 24

2007-06-04

G.6 - Year 2020 - கவியரங்கம்

---------------

0-1) -- இறைவணக்கம் -- (கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா)

பத்தோடொரு பத்தாய்இரு பதுமாகிய தலைப்பை

வைத்தார்எழு துகநீரென; மறிசேர்கரம் உடையாய்!

இத்தாரணி எல்லாம்படை ஈசா!விடை ஏறும்

அத்தா!அருள் புரிவாய்!இணை அடிநான்தொழு தேனே.


பதம் பிரித்து:

பத்தோடு ஒரு பத்தாய் இருபதும் ஆகிய தலைப்பை

வைத்தார் எழுதுக நீர் என; மறி சேர் கரம் உடையாய்!

இத் தாரணி எல்லாம் படை ஈசா! விடை ஏறும்

அத்தா! அருள் புரிவாய்! இணை அடி நான் தொழுதேனே.


0-2) -- அவை வணக்கம் -- (கலிவிருத்தம் - மா மா விளம் காய்)

தலைவன் பெயரைத் தாங்கிய தலைவர்க்கும்

மலையும் கடலும் கடந்துறை நண்பர்கள்

பலர்க்கும் வணக்கம்; பாடலைச் செவிமடுத்து

நலங்கள் குறைகள் எவையென நவில்வீரே;


1) -- (அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு) --

இருப திருப தென்றாலே

.. என்ன தோன்று கிறதென்றே

ஒருவ ரைப்போய்க் கேட்டேன்நான்;

.. ஒருமா திரியாய்ப் பார்த்துப்பின்

வருவ தெல்லாம் சொல்வேன்;நீர்

.. வையும் இருப திங்கென்றார்!

தருவ தாக நானில்லேன்;

.. சட்டென் றெழுந்த கன்றுவிட்டேன்!


2)

கோடி வீட்டில் வாழ்கிழவர்

.. கோலை ஊன்றி வரும்போது

நாடிச் சென்று சொல்கவென்றேன்!

.. "நாடு போகும் பாதையிலே

கோடி கோடி வந்தாலும்

.. கோட்டை விட்டார் கொள்கைகளை;

மூடி விடுவேன் நான்கண்ணை,

.. மோகம் நாட்டை விடுமுன்னே"!


3) -- (அறுசீர் விருத்தம் - "விளம் மா காய்" என்ற அரையடி வாய்பாடு) --

ஐம்பது வயதுப் பால்காரர்;

.. அவரிடம் போயும் நான்கேட்டேன்;

செம்பினில் பாலை விட்டபடிச்,

.. சிறியதோர் அலைபே சியிலேதோ

வம்புகள் பேசிச் சிரித்தபடி,

.. "வந்திடும் அந்தப் பொற்காலம்;

கொம்பிலா மாடு குடம்கறக்கும்;

.. குழாயினில் நீரும் வரும்"என்றார்!


4) -- (அறுசீர் விருத்தம் - "விளம் விளம் காய்" என்ற அரையடி வாய்பாடு) --

துணிக்கடைச் சோமுவைக் கேட்டவுடன்,

.. "சொல்லவும் வேண்டுமோ? புடைவைகளை

அணிபவர் நாட்டினில் இலராகி,

.. அரைகுறை ஆடையர் பலராவர்;

கணிப்பொறி வழிமிகப் பொருள்வாங்கிக்

.. கடைகளில் நெரிசலே இலையாகும்;

அணியெனக் கிழிசலே உடுத்துவதால்

.. ஆண்டியும் அரசனும் ஒன்றென்றார்!


5) -- (எண்சீர் விருத்தம் - "விளம் விளம் விளம் மா" என்ற அரையடி வாய்பாடு) --

பள்ளியில் படிக்கிற ஒருவனைக் கேட்டேன்;

.. "படிப்பதும் தேவையோ இருபதி ருபதில்!

உள்ளதெல் லாம்தரும் கூகிளும்; அதனால்

.. உலகினில் நூல்களை வாங்குவோர் இலரே;

கொள்ளையாய்ச் சம்பளம் வந்திடும், சும்மாக்

.. கொழகொழ ஆங்கிலப் பேச்சுவந் தாலே!

எள்ளுவர் என்பதால் தமிழினில் பேச

.. எவருமே தயங்கிடும் காலம்"என் றானே!


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...