G.011
இப்பாடல் 2014-இல் எழுதப்பட்டது.
சந்தவசந்தக் கவியரங்கம் - 39 -
"சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்" என்ற தலைப்பு.
2014-01-11
G.11 - நாட்டின் கோலம் - கவியரங்கம் 39
---------------------------------------
0-1) --- இறைவணக்கம் -- அறுசீர்விருத்தம் - "மா கூவிளம் மா விளம் விளம் மா" ---
-- (முதற்சீர் குறில்/குறில்+ஒற்று என்று முடியும்.) --
துதிக்கும் நாவர சர்க்குத் துன்பமி லாதவா றன்று
கொதிக்கும் நீற்றறை தன்னைக் குளிர்ந்திட வைத்தவா அலையார்
நதிக்கும் சென்னிமேல் இடத்தை நல்கினாய் நாரியோர் பங்கா
உதிக்கும் செஞ்சுடர் வண்ணா உன்னடி உள்குமென் நெஞ்சே.
நீற்றறை - சுண்ணாம்புக் காளவாய்;
உதிக்கும் செஞ்சுடர் வண்ணா - எழுகின்ற ஞாயிறு போன்ற செம்மேனியனே;
உன்னடி உள்குமென் நெஞ்சே - உன் திருவடியை என் நெஞ்சம் சிந்திக்கும்;
0-2) --- அவைவணக்கம் -- கலிவிருத்தம் - "மா மா மா விளம்" ---
நஞ்சம் உண்டான் அடியே நச்சினீர்,
செஞ்சொல் அறிவீர், வணங்கிச் செப்புவேன்,
நெஞ்சம் கொதிக்கச் செய்யும் நிகழ்வுகள்
கொஞ்சம் கேட்டுக் கருத்துக் கூறுவீர்.
நஞ்சம் உண்டான் அடியே நச்சினீர் - நீலகண்டன் திருவடியையே விரும்பியவர்களே;
செஞ்சொல் அறிவீர் - நல்ல தமிழை அறிந்தவர்களே;
1) --- கலிவிருத்தம் - "விளம் மா மா காய்" ---
சத்திய மேவ ஜயதே என்றந்த
முத்திரை சொல்லும் நாட்டில் முடிவின்றி
எத்திசை நோக்கி னாலும் இருளாளும்
எத்தினை அரியா சனத்தில் ஏற்றினோமே.
அந்த - that; அந்தம் - அழகு;
எத்து - வஞ்சகம் (cheating, deceiving);
2) --- எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு ---
திண்டாடும் மக்களுக்குச் செய்த தென்னே
.. தினந்தோறும் பிரிவினைகள் பேசி நாட்டைத்
துண்டாடும் போக்கொன்றே கொள்கை யானார்
.. சுருட்டுவதே தொழிலாகக் கொண்டார் ஊரில்
வண்டாடும் சோலைபல வைப்போம் என்பார்
.. வைத்ததுபோல் கணக்கிருக்கும் வரிப்ப ணத்தை
உண்டாடும் இன்னாரை எண்ணில் நெஞ்சில்
.. ஓங்கியெழும் உணர்வுகளை உரைக்கொ ணாதே.
உண்டாடும் - உண்டு ஆடும் - தின்று இயங்குகின்ற;
இன்னார் - இத்தன்மையர் (Person of such a character); பகைவர்;
உரைக்கொணாது - உரைக்க ஒண்ணாது;
3) --- கலிவிருத்தம் - "காய் காய் மா தேமா" ---
நாட்டிற்கா வாழ்கின்றேன் என்பார் நாளும்
நாட்டத்திற் காசிருக்கும் நானி லத்தில்
ஆட்டத்தின் முடிவணுகும் போதும் பேச்சிற்
காட்டத்தின் முடிவினைத்தான் காட்ட மாட்டார்.
நாட்டிற்கா - நாட்டிற்காக;
நாட்டம் - கண்; விருப்பம்; நோக்கம்;
காட்டம் - Pungency;
4) --- அறுசீர்விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு ---
வெட்டிப் பேச்சில் வீரர்களாய்
.. வீதி யெங்கும் முழங்கிடுவார்
மட்டில் லாது வாக்குறுதி
.. வழங்கி வென்று நாடாளும்
கட்டில் ஏறிக் கூசாமல்
.. கையை நீட்டிக் கறைசேரும்
கட்டில் மகிழும் கைதவர்தம்
.. காலம் முடிவ தெந்நாளோ!
மட்டு - அளவு;
நாடாளும் கட்டில் - அரசுகட்டில் - சிங்காதனம் (Throne);
கறை சேரும் கட்டு - கறுப்புப்பணக் கட்டுகள்; (கட்டு - மூட்டை - Bundle, packet, pack, bale);
கைதவர் - வஞ்சகர்;
5)
மொழியைப் போற்றி முழங்கிடுவார்
.. முதலில் மக்கள் பசிதீர்க்கும்
வழியைப் பாரார் இலவசங்கள்
.. வழங்கி வெற்றி வாங்கிடுவார்
பழியை இழிவைப் பாராமல்
.. பரம்ப ரைக்குப் பொருள்சேர்ப்பார்
சுழியை நீங்கி மக்களெலாம்
.. சுகித்தி ருப்ப தெந்நாளோ!
சுழி - நீர்ச்சுழி (Whirl, vortex) - சுழல்;
6)
வார்த்தை ஜாலம் விரித்திடுவார்
.. மடையர் ஆக்கி மகிழ்ந்திடுவார்
நாத்தி கத்தை வணங்கிடுவார்
.. நன்மை செய்யச் சுணங்கிடுவார்
சேர்த்து வைப்பார் தம்பொருளைச்;
.. சேர்த்து வையார் நாட்டினரைத்;
தூர்த்தர் ஆளும் காலம்போய்ச்
.. சுகித்தி ருப்ப தெந்நாளோ!
சுணங்குதல் - தாமதித்தல் (To delay, loiter, linger);
தூர்த்தர் - கொடியவர்;
7) --- எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு ---
பழம்பெருமை பேசிடுவார் பாதை போடப்
.. பழங்கோயில் இடிப்பதற்கும் அஞ்ச மாட்டார்;
தொழும்தமிழை என்றிடுவார்; தெய்வம் தன்னைத்
.. தொழும்தமிழைப் புறக்கணிப்பார்; நாளும் காதில்
விழும்தமிழைக் கேட்கிலது நாரா சம்பாய்
.. வேதனையைத் தருவதையும் பொருட்ப டுத்தார்;
அழும்தமிழைக் காட்டுகின்ற காலம் மாறி
.. அருந்தமிழை ஆதரிப்ப தெந்த நாளோ!
தொழும் - 1. போற்றுங்கள் என்ற ஏவல்; 2. தொழுகின்ற;
அழும்தமிழைக் காட்டுகின்ற காலம் மாறி - தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் வரும் ஆங்கிலம் கலந்த தமிழையும் பிழைகள் மலிந்த தமிழையும் சுட்டுவதாகவும், தமிழ் வாடுகின்றது என்றும் பொருள்கொள்ளலாம்;
(தமிழைக் காக்கின்றோம் என்று சொல்வார் நடத்தும் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் இவை கண்கூடு);
வி. சுப்பிரமணியன்
------------- -------------
------------ Some comments from members of Santhavasantham group ---------
ramaNi wrote:
அவலத்தை அழகுறச் சொல்லி, இப்போதைக்கு பத்ரகிரியார் போலப் புலம்புவதொன்றே நன்மக்கள் செய்யக் கூடியது என்று காட்டியது அருமை!
--ரமணி
அவனடிமை wrote:
சிவனையே பாடும் சிவசிவா அவர்களையும் சிலிர்த்தெழுந்து சீற வைக்கிறதே சில்லறை அரசியல்! ஆச்சரியம்! தலைவர் கொடுத்த தலைப்பின் கொதிப்பு?
My response:
Good observation!
Since you wondered, here is the rest of the story! :)
இத்தலைப்பிற்கு எழுதலாமா வேண்டாமா என்று சிந்தித்தேன்.
ஏனெனில் எப்பாடலையும் எழுதுவதற்கு அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். அவ்வாறு சிந்திப்பதும் எழுதுவதும் நன்மை பயக்குமா என்றும் சிந்தித்தேன்!
பின், எழுதுவதும் நல்லதே என்று தோன்றியது!
நான் இட்ட பாடலில் சுட்டப்பெறும் விஷயங்களுக்குச் சில உதாரணங்கள்:
Highway work poses a threat to ancient temple
It was built during the reign of Rajendra Chola I
Published - March 24, 2012
1,000-year-old Chola-era temple facing threat of demolition
Road under the Thanjavur-Vikkiravandi four-way project to be expanded
Published - May 16, 2013
(தகவல் பரவியதும், அன்பர்கள் விழிப்புணர்வால் இவ்விரண்டும் தடுக்கப்பட்டன.
https://www.thehindu.com/news/national/tamil-nadu/nhai-spares-1000yearold-temple/article4815078.ece
NHAI spares 1000-year-old temple
It is taking up road expansion under the Thanjavur-Vikkiravandi four-lane project
Published - June 15, 2013
....... “We have decided to spare the temple. You can be assured that it will be protected,” NHAI sources said here on Friday .....
Interesting choice of words in the government department statement!
கொதித்த உள்ளத்தைக் குளிர்விக்க வேறு பாடல்களும் எழுதினேன்!! :)
------------- -------------