Saturday, January 17, 2026

G.27 - இலக்கணம் படுத்தும் பாடு (குறும்பா - Limerick)

G.027

வை 2019-இல் எழுதப்பெற்ற பாடல்கள்.


2019-02-10

G.27 - இலக்கணம் படுத்தும் பாடு (குறும்பா - Limerick)

=============

(Limerick)

(குறும்பா அமைப்பு.

அடிகள் 1, 2, 5 - காய் காய் மா - அடியுள் வெண்டளை. ஓர் எதுகை. அடி ஈற்றில் இயைபு.

அடிகள் 3, 4 - காய் காய் - அடியுள் வெண்டளை. ஓர் எதுகை. அடி ஈற்றில் இயைபு.)


1)

இலக்கணமென் றால்நடுங்கார் ஆரே

கலக்கமது தீர்வழிகா ணாரே

.. புத்தகங்கள் வாசித்தும்

.. நித்தமிக யோசித்தும்

இலக்குதனை என்றுமடை யாரே.


பதம் பிரித்து:

இலக்கணம் என்றால் நடுங்கார் ஆரே?

கலக்கமது தீர்-வழி காணாரே;

.. புத்தகங்கள் வாசித்தும்,

.. நித்த(ம்)மிக யோசித்தும்,

இலக்குதனை என்றும் அடையாரே!


2)

எட்டியுமி லக்கணமும் ஒக்கும்

விட்டுவிட நெஞ்சமும்து டிக்கும்

.. .. புணர்ச்சியெனில் அச்சமென்றோர்

.. .. உணர்ச்சியெழும் இல்லைவென்றோர்

நட்டலும்க னாவினில்ந டக்கும்.


எட்டியும் இலக்கணமும் ஒக்கும் - இலக்கணம் எட்டிக்காய் போல் கசப்பது;

புணர்ச்சி எனில் அச்சம் என்று ஓர் உணர்ச்சி எழும் - புணர்ச்சி விதிகள் என்றால் பயமே தோன்றும்;

இல்லை வென்றோர் - (அதனை) வென்றவர்கள் இல்லை;

நட்டலும் கனாவினில் நடக்கும் - இலக்கணத்தை விரும்புவது கனவில்தான் நிகழும்!


3)

அல்வழிப்பு ணர்ச்சியென்ற போதே

நல்விழிப்பு ணர்ச்சியும்தங் காதே

.. .. தலைகீழாய் நின்றாலும்

.. .. இலையாவும் தின்றாலும்

வெல்வழியைக் காணுதலா காதே.


அல்வழிப்புணர்ச்சி என்ற போதே - "அல்வழிப் புணர்ச்சி" என்ற சொல்லைக் கேட்டதுமே;

நல் விழிப்பு உணர்ச்சியும் தங்காதே - உறக்கம் வந்துவிடும்;

தலைகீழாய் நின்றாலும் - பெருமுயற்சி செய்தாலும்;

இலை யாவும் தின்றாலும் - நினைவாற்றலுக்காகப் பல பச்சிலைகளை உண்டாலும்;

வெல்-வழியைக் காணுதல் ஆகாதே - இலக்கணத்தை வெல்லும் வழியைக் காண முடியாதே.


4)

வினைத்தொகைக்குக் காட்டூறு காயே

அனைத்துலக நூல்களில்பார்ப் பாயே

.. .. தயிர்ச்சோற்றின் நற்றுணையே

.. .. பயில்வோர்க்கும் பொற்றுணையே

மனத்திலிடும் மந்திரமாய் வாயே.


வினைத்தொகைக்குக் காட்டு ஊறுகாயே - வினைத்தொகைக்கு உதாரணம் ஊறுகாய்;

அனைத்து உலக நூல்களில் பார்ப்பாயே - எல்லா இலக்கண நூல்களிலும் இதே உதாரணத்தைக் காணலாம்;

தயிர்ச்சோற்றின் நற்றுணையே - தயிர்ச்சோற்றுக்கு ஏற்றது ஊறுகாய்;

பயில்வோர்க்கும் பொற்றுணையே - கற்போர்க்கும் இது பொன் போன்றது;

மனத்திலிடும் மந்திரம் ஆய்வாயே - இதுவே (தேர்வுகளில்) காக்கும் மந்திரம் என்று உணர்வாயாக!


வி. சுப்பிரமணியன்

------------- -------------


1 comment:

  1. எட்ட இயலா இலக்கு இலக்கணம்.
    எட்டியும் இனிக்கலாம் ஒரு காலம்.
    இலக்கணம் ஒருபோதும் இனிக்காது.
    இனிக்காதிற்கினிய தமிழ் போதும்

    ReplyDelete

G.28 - என்னாடு - கவியரங்கம் 35

G.028 இப்பாடல் 2011- இல் எழுதப்பட்டது . 2011-08-07 G.28 - என்னாடு - கவியரங்கம் 35 ------------ ( அறுசீர் விருத்தம் - மா மா காய் ...