G.024
இப்பாடல் 2014-இல் எழுதப்பட்டது.
2014-08-31
G.24 - திரிகாலம்*
-------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
* திரிகாலம் - 1. முக்காலம்; 2. திரி+காலம் - என்று வினைத்தொகையாகவும் கொள்ளலாம். (திரிதல் - அலைதல், மாறுதல், நிலைகெடுதல்);
நேற்று:
1)
கொஞ்சம் இருந்தாலும் குறைகளின்றி வாழ்ந்தார்கள்
வஞ்சம் மனத்திலின்றி வரவுக்குள் வாழ்ந்தார்கள்
செஞ்சொல் தமிழ்பாடித் தெய்வத்தைத் தொழுதார்கள்
நஞ்சம் கலவாத நல்வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
கலவாத - கலத்தல் இல்லாத;
2)
சுற்றம் தனைப்பேணிச் சுகமாக வாழ்ந்தார்கள்
குற்றம் புரிந்தாரைக் கொற்றவனும் தண்டித்து
மற்றக் குடிமக்கள் மனக்கலக்கம் தீர்த்திருந்தான்
மற்றும் வனத்துள்ள மாக்களும்தான் தழைத்தனவே.
மற்றக் குடிமக்கள் - பிறர்; (மற்ற என்ற சொல்லின்பின் வல்லொற்று மிகும்).
மற்றும் - மேலும்;
மா - விலங்கு;
* குற்றம் புரிந்தவர்களும் அந்நாட்டுக் குடிகளே. அவர்களுக்குத் தண்டனை பெறும் மனக்கலக்கம் உண்டு. அத்தகையோரால் பிறருக்கு ஏற்படக்கூடிய மனக்கலக்கத்தை மன்னன் தீர்த்தான்.
3)
நச்சரவம் எதுவென்று நாட்டுமக்கள் அறிந்திருந்தார்
தச்சர்முதல் தலைவர்வரை தம்பணிகள் செய்திருந்தார்
இச்சைகளை வரம்பிற்குள் இருத்திமனம் மகிழ்ந்திருந்தார்
உச்சிவெயில் தனில்மரங்கள் ஒதுங்கநிழல் தந்தனவே.
நச்சரவம் - விஷப்பாம்பு;
இன்று:
4)
கொஞ்சம் இருந்தாலும் கொடுஎன்று பிடுங்குகின்றார்
நெஞ்சில் பலவிருப்பம் நித்தமெழக் கடன்வாங்கித்
துஞ்சும் வரைஅடைத்துத் துன்பத்தில் உழல்கின்றார்
வெஞ்சொல் உரையாநாள் வீணென்றே எண்ணுகின்றார்
நித்தம் - தினந்தோறும்; எப்பொழுதும்;
துஞ்சும்வரை - இறக்கும்வரை;
வெஞ்சொல் உரையாநாள் - கொடும்சொற்களைப் பேசாத நாள்;
5)
குற்றம் பலபேசிக் குடும்பத்தைப் பிரிக்கின்றார்
கற்றுத் தரத்தொலைக் காட்சிகளில் தொடர்களுண்டே
வெற்றுக் கதைபேசிக் காலத்தை வீணாக்கிக்
கற்றைப் பணமொன்றே கருத்தாகி அலைகின்றார்.
6)
காற்றினையும் மாசாக்கிக் காட்டினையும் கரியாக்கி
ஆற்றுமணல் காசாக்கி அடுத்ததலை முறைக்கிடரே
ஏற்றுவதை எண்ணாமல் இயங்குகிற காலமிது
மாற்றமிது மறுப்பில்லை முன்னேற்றம் இதுதானோ?
நாளை:
7)
மாற்றம் வரவேண்டும் தடுமாற்றம் அறவேண்டும்
ஆற்றும் செயல்களினால் அனைத்துயிர்க்கும் நலம்வேண்டும்
காற்றும் நதிநீரும் கனைகடலும் கறைதீரப்
போற்றும் மனம்பெற்றால் பொற்காலம் அதுதானே.
கனைகடலும் - ஒலிக்கின்ற கடலும்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment