G.021
இது 2018-இல் எழுதப்பட்டது.
2019-09-18
G.21 - தாமிரபரணியைக் காப்போம்
-------------------------
முற்குறிப்பு: நிகழவிருந்த தாமிரபரணி புஷ்கரத்தை ஒட்டி, நதிகளைப் பேணும் அவசியத்தை வலியுறுத்த எழுதியது இது.
1)
பொதிகைமலை தனில்பிறந்து புவியோரின் பசிதீர்க்கும்
நதியெனவே நவில்வார்கள் நானிலத்தில் பிறரெல்லாம்;
உதிரமது பாலாக்கி ஊட்டுகின்ற அன்னையினும்
அதிகமிவள் அருளென்பர் அறிவுமிகு தமிழோரே.
2)
தண்ணீரைத் தருகின்ற தாமிர பரணித்தாய்
கண்ணீரை விடலாமோ? காப்பதுநம் கடமையென்றே
எண்ணாரும் இங்குளரோ? இன்னமுதைச் சாக்கடைநீர்
பண்ணாமல் போற்றுவது பண்புடையோர் செயலன்றோ!
3)
நீருயர நெல்லுயரும்; நெல்லுயர ஊருயரும்;
ஊருயர நாடுயரும்; உணராதார் செயல்களினால்
சேருகிற மாசுகளால் செல்வத்தைத் தொலைப்போமோ?
வாருமினிப் பொருநைதனை வாழ்வித்து வாழ்வோமே!
பொருநை - தாமிரபரணிநதி;
4)
குப்பைகளும் கழிவுகளும் கொட்டுமிடம் நதியென்றால்
தப்பன்றோ? இனியென்றும் தாமிர பரணிதனைச்
செப்பமுறக் காத்திடுவோம்; "தீமையிலா நன்னீரே
எப்பொழுதும் பாயட்டும்" என்றுறுதி மொழிவோமே!
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment