Tuesday, May 21, 2024

G.8 - பொழுதுபோக்கு - கவியரங்கம் 43

G.008

இப்பாடல் 2016-இல் எழுதப்பட்டது.

I wrote 2 sets of songs for this kaviyarangam at that time. This is the second set.


சந்தவசந்தக் கவியரங்கம் - 43

"எனக்குப் பிடித்த தலைப்பு" (எத்தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம்)


2016-06-07

G.8 - பொழுதுபோக்கு - கவியரங்கம் 43

-----------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" - அரையடி வாய்பாடு)


0-1) ---- இறைவணக்கம் ----

தொழுதிட எண்ணா என்னைத் தொழுதிட வைக்கும் தூயா

எழுதிட எண்ணா என்னை எழுதிட வைக்கும் ஈசா

கழுதுகள் உலவு கின்ற காட்டிடை நடஞ்செய் நாதா

மழுவினை ஏந்தெம் மானே மாதொரு பங்கா போற்றி.


கழுது - பேய்;


0-2) ---- அவைவணக்கம் ----

முழுமுதல் ஈசன் தன்னை முன்னடி போற்றி இங்குக்

குழுமிய அவையோ ருக்குக் கூப்பினேன் என்க ரங்கள்

விழுமிய பாட லெல்லாம் விருப்பொடு கேட்கும் காதீர்

உழுதசால் உழும்பண் பேன்என் உரையையும் பொறுக்க இன்று.


(அப்பர் தேவாரம் - 5.90.8 - "உழுத சால்வழியே உழுவான்பொருட்டு இழுதை நெஞ்சமிது என் படுகின்றதே");


1) ---- பொழுதுபோக்கு ----

காலையில் எழுந்து காப்பி கையினில் ஏந்திச் சன்னல்

மூலையில் அமர்ந்து செய்தி முரசறை தாளை ஓதிச்

சாலையில் வருவார் போவார் தங்களைக் கண்கா ணிக்கும்

வேலையில் பொழுது போக்க விரும்புவார் சிலருள் ளாரே.


2)

கட்சியின் கொடியைக் கண்டு கைகளைக் குவித்து நிற்பார்

அச்சமே இல்லை என்பார் அங்கொரு தலைவர் வந்தால்

நிச்சயம் காலில் வீழ்வார் நேர்மையின் சிகரம் என்று

மெச்சிமெய் குளிர்வார் நம்மூர் வீதியில் காணும் ஒன்றே.


3)

கட்டிய கணவன் உண்ணக் காத்திருந் தாலும் தோளைத்

தட்டிய ழைத்த போதும் சற்றும றிந்தி லாள்அப்

பெட்டியில் ஓடு கின்ற பெருந்தொடர் மூழ்கம் மாது

திட்டியும் திருந்தாள் என்னே சிலரது பொழுது போக்கு.


4)

அரைத்ததை மீண்டும் மீண்டும் அரைக்கிற படங்கள் பார்த்துத்

திரைப்பட நடிகர் கட்குச் செய்கிறார் பால்மு ழுக்கே

உரைப்பதும் அவர்பு கழ்ச்சி ஒட்டுவ தவர்ப டங்கள்

கரைப்பது காசி னோடு காலமும் உணர்கி லாரே.


5)

பொழுதினைப் போக்க என்று புவியினில் மாந்தர் செய்யும்

பழுதுகள் எண்ணிப் பார்த்தால் பற்றிடும் அச்சம் பாட்டை

எழுதிடும் போதென் னுள்ளும் எழுந்திடக் கண்டேன் ஆரே

வழுவிலாப் பொழுது போக்கின் வகைதனை எடுத்து ரைப்பார்?


6)

நாட்டினை வளப்ப டுத்த நம்மியல் பிற்கு கந்த

காட்டுகள் முன்னோர் செய்து காட்டியுள் ளார்கள் நல்ல

பாட்டுகள் பாடி நூல்கள் பயின்றவை பயிற்று வித்தூர்

வாட்டம ழித்து வாழ்தல் மாசிலாப் பொழுது போக்கே.


பதம் பிரித்து:

நாட்டினை வளப்படுத்த நம் இயல்பிற்கு உகந்த

காட்டுகள் முன்னோர் செய்துகாட்டியுள்ளார்கள்; நல்ல

பாட்டுகள் பாடி, நூல்கள் பயின்று, அவை பயிற்றுவித்து, ஊர்

வாட்டம் அழித்து வாழ்தல் மாசு இலாப் பொழுதுபோக்கே.


(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.21.8 -

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.)


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Saturday, May 18, 2024

G.7 - எத்தலைப்பில் எழுதுவது? - கவியரங்கம் 43

G.007

இப்பாடல் 2016-இல் எழுதப்பட்டது.

I wrote 2 sets of songs for this kaviyarangam at that time. This is the first set.


சந்தவசந்தக் கவியரங்கம் - 43

"எனக்குப் பிடித்த தலைப்பு" (எத்தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம்)


2016-05-21

G.7 - எத்தலைப்பில் எழுதுவது? - கவியரங்கம் 43

----------------------------------------------

(கலிவிருத்தம் - "தானா தனதானா தானா தனதானா" என்ற சந்தம்)

(மா மாங்காய் மா மாங்காய்)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே")


0-1) ---- இறைவணக்கம் ---

தலைப்பை யரவோடு தண்ணார் மதிசூடீ

உலப்பில் பெருமானே உம்பர்க் கொருகோனே

மலைக்கு மகள்நாதா மழுவாள் உடையாயென்

மலைப்பை அறுவித்து வானம் அருளாயே.


தலைப் பையரவோடு தண் ஆர் மதி சூடீ - தலையில் படம் உடைய நாகப்பாம்போடு குளிர்ந்த பிறைச்சந்திரனையும் அணிந்தவனே; (பை - பாம்பின் படம்);

உலப்பு இல் பெருமானே - அழிவற்றவனே; (உலப்பு - அழிவு; சாவு);

உம்பர்க்கு ஒரு கோனே - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவனே; (உம்பர் - தேவர்);

மலைக்கு மகள் நாதா - உமைக்குக் கணவனே; (மலைக்கு மகள் - மலைமகள் - உமை)

மழுவாள் உடையாய் - மழுவாயுதத்தை ஏந்தியவனே;

என் மலைப்பை அறுவித்து வானம் அருளாயே - என் அறிவுமயக்கத்தைத் தீர்த்து நற்கதி அருள்வாயாக; (அறுவித்தல் - அறுத்தல் - இல்லாமற்செய்தல்; நீக்குதல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.62.8 - "மாசார் பாச மயக்கு அறுவித்து எனுள்" - மாசு ஆர் - குற்றம் பொருந்திய. பாசமயக்கு - ஆசையாகிய மயக்கத்தை. அறுவித்து - நீங்கச்செய்து.);


0-2) --- அவைவணக்கம் ---

தலைப்புத் தருபோதும் சங்கை மிகவாகி

அலைப்புண் நிலையேனான் அதுவும் இலையென்றால்

இலக்குத் தெரியாதே எழுத முயல்வேன்தன்

கலக்கம் அளவில்லை காணீர் அவையீரே.


தலைப்புத் தருபோதும் சங்கை மிக ஆகி - தலைப்பைத் தந்தபொழுதும் சந்தேகம்/அச்சம் மிக ஆகி; (தருபோதும் - வினைத்தொகை - தந்த போதும்); (சங்கை - ஐயம்; அச்சம்);

அலைப்பு உண் நிலையேன் நான் - வருந்துகின்ற நிலையை உடைய நான்; (அலைப்பு - வருத்தம்; அலைப்பு உண்ணுதல் - வருத்தம் அடைதல்);


1)

கலவ மயிலன்னார் காதல் கவினாரும்

நிலவு கதிர்சாயும் நேரம் கடல்சூழ்ந்த

உலகை அரசாள்வோர் ஊழல் எனநாளும்

பலரும் சலியாமற் பாக்கள் புனைகின்றார்.


பதம் பிரித்து:

கலவ மயில் அன்னார் காதல், கவின் ஆரும்

நிலவு, கதிர் சாயும் நேரம், கடல் சூழ்ந்த

உலகை அரசு ஆள்வோர் ஊழல், என நாளும்

பலரும் சலியாமல் பாக்கள் புனைகின்றார்


கலவமயில் அன்னார் - தோகைமயில் போன்ற பெண்கள்;

கதிர் - சூரியன்;

சலியாமல் - சலித்தல் இன்றி; (சலித்தல் - 1. சோர்தல்; 2. To sift; சல்லடையாற் சலித்தல்);


2)

மண்ணிற் பலகோடி மாக்கள் உயிர்வாழ்ந்து

மண்ணில் மறைகின்ற வண்ணம் அதுகண்டோம்

எண்ணிற் புனைபாவின் எல்லை எதுவென்று

திண்ணம் உணர்வோமேல் செப்பல் தெளிவாமே.


மாக்கள் - விலங்குகள்; மனிதர்கள்;

எண்ணில் புனை பாவின் எல்லை எது என்று திண்ணம் உணர்வோமேல் - சிந்தித்தால், புனைகின்ற பாக்களின் கால அளவு எது என்று உறுதியாக உணர்ந்தோம் என்றால்;

செப்பல் தெளிவு ஆம் - நாம் சொல்வதில் (இயற்றும் பாக்களில்) தெளிவு உண்டாகும்;


3)

கற்றைப் பணம்நாடிக் காலம் கழியாமல்

வெற்றுக் கவிபாடி விழலுக் கிறையாமல்

வெற்றிக் கொடிமீது விடையை உடையான்தாள்

பற்றிப் புகழ்மாலை பாடிப் பணிவோமே.


காலம் கழியாமல் - காலத்தைப் போக்காமல்;

விழலுக்கிறையாமல் - வீணே பாடுபடாமல்; பயனற்ற செயலில் ஈடுபடாமல்;

வெற்றிக் கொடிமீது விடையை உடையான் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவன்;

உடையான் தாள் பற்றிப் புகழ்மாலை பாடி - இறைவன் திருவடியைப் பிடித்துத் துதிகள் பாடி; இறைவன் திருவடியைக் குறித்துப் பாமாலைகள் பாடி; (பற்றி - 1. பிடித்து (பற்றுதல்); 2. குறித்து));


4)

ஆற்றுச் சடையின்மேல் அரவும் அணிதிங்கட்

கீற்றும் புனையீசன் கேடில் மலைபேர்த்தான்

போற்ற விரலூன்றிப் புகழார் பெயரீந்த

ஏற்றன் தனைநாமும் ஏத்தி மகிழ்வோமே.


ஆற்றுச் சடையின்மேல் அரவும் அணி திங்கட் கீற்றும் புனை ஈசன் - கங்கையை இருக்கும் சடையின்மேல் பாம்பையும் அழகிய பிறைச்சந்திரனையும் அணிந்த ஈசனது;

கேடு இல் மலை பேர்த்தான் போற்ற விரல் ஊன்றிப் புகழ் ஆர் பெயர் ஈந்த - அழியாத கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் தன்னைப் போற்றுமாறு ஒரு திருப்பாத விரலை ஊன்றி நசுக்கிப், பின் அவனுக்கு இராவணன் என்ற புகழ்மிக்க பெயரைக் கொடுத்த;

ஏற்றன்தனை நாமும் ஏத்தி மகிழ்வோமே - இடபவாகனனான சிவபெருமானை நாமும் துதித்து இன்புறுவோம்; (ஏற்றன் - இடபவாகனன்);


5)

தொழுத இமையோர்க்குச் சுதையை அருளீசன்

பழுதில் பெருமான்றன் பாதம் தனையுன்னி

எழுதில் தெளிவாகும் எண்ணம் அதனாலே

பழுதை தனையென்றும் பாம்பா நினையோமே


சுதை - அமுதம்;

பழுது இல் பெருமான் - குற்றமற்ற பெருமான்;

உன்னி - நினைத்து; சிந்தித்து;

எழுதில் - எழுதினால்;

பழுதைதனை என்றும் பாம்பா நினையோமே - பழுதையைப் பாம்பாக நினைக்கமாட்டோம்; (பழுதை - கயிறு; வைக்கோற்புரி);


6)

வேலைப் பளுவென்றும் வேளை இலையென்றும்

ஆலைப் படுகன்னல் அதுவாய்த் தினமோடிக்

கோலைப் பிடிகாலம் குறுகா முனமீசன்

காலைப் பணிவோமேல் காலன் பிடியானே.


பளு / பளுவு - கனம்; சுமை;

வேளை - பொழுது; காலம்;

கன்னல் - கரும்பு;

கோல் - கம்பு; ஊன்றுகோல்;

குறுகுதல் - அணுகுதல்; நெருங்குதல்;

ஆலைப் படு கன்னல் அது ஆய் - கரும்பாலையில் நசுக்கப்படும் கரும்பு போல ஆகித் துன்புற்று;

தினம் ஓடிக் கோலைப் பிடி காலம் குறுகாமுனம் - நாள்கள் சென்று, மூப்பு அடைந்து, ஒரு கைத்தடியைப் பிடிக்கும் காலம் வந்தடைவதன் முன்னமே;

ஈசன் காலைப் பணிவோமேல் - ஈசன் திருவடியை நாம் வணங்கினால்;

காலன் பிடியானே - நம்மைக் காலன் பிடிக்கமாட்டான்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...