Monday, March 4, 2024

G.6 - Year 2020 - கவியரங்கம்

G.006

இப்பாடல் 2007-இல் எழுதப்பட்டது.

This may provide some entertainment - the folly (or uncanny insight) of predictions! :)


சந்தவசந்தக் கவியரங்கம் - 24

2007-06-04

G.6 - Year 2020 - கவியரங்கம்

---------------

0-1) -- இறைவணக்கம் -- (கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா)

பத்தோடொரு பத்தாய்இரு பதுமாகிய தலைப்பை

வைத்தார்எழு துகநீரென; மறிசேர்கரம் உடையாய்!

இத்தாரணி எல்லாம்படை ஈசா!விடை ஏறும்

அத்தா!அருள் புரிவாய்!இணை அடிநான்தொழு தேனே.


பதம் பிரித்து:

பத்தோடு ஒரு பத்தாய் இருபதும் ஆகிய தலைப்பை

வைத்தார் எழுதுக நீர் என; மறி சேர் கரம் உடையாய்!

இத் தாரணி எல்லாம் படை ஈசா! விடை ஏறும்

அத்தா! அருள் புரிவாய்! இணை அடி நான் தொழுதேனே.


0-2) -- அவை வணக்கம் -- (கலிவிருத்தம் - மா மா விளம் காய்)

தலைவன் பெயரைத் தாங்கிய தலைவர்க்கும்

மலையும் கடலும் கடந்துறை நண்பர்கள்

பலர்க்கும் வணக்கம்; பாடலைச் செவிமடுத்து

நலங்கள் குறைகள் எவையென நவில்வீரே;


1) -- (அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு) --

இருப திருப தென்றாலே

.. என்ன தோன்று கிறதென்றே

ஒருவ ரைப்போய்க் கேட்டேன்நான்;

.. ஒருமா திரியாய்ப் பார்த்துப்பின்

வருவ தெல்லாம் சொல்வேன்;நீர்

.. வையும் இருப திங்கென்றார்!

தருவ தாக நானில்லேன்;

.. சட்டென் றெழுந்த கன்றுவிட்டேன்!


2)

கோடி வீட்டில் வாழ்கிழவர்

.. கோலை ஊன்றி வரும்போது

நாடிச் சென்று சொல்கவென்றேன்!

.. "நாடு போகும் பாதையிலே

கோடி கோடி வந்தாலும்

.. கோட்டை விட்டார் கொள்கைகளை;

மூடி விடுவேன் நான்கண்ணை,

.. மோகம் நாட்டை விடுமுன்னே"!


3) -- (அறுசீர் விருத்தம் - "விளம் மா காய்" என்ற அரையடி வாய்பாடு) --

ஐம்பது வயதுப் பால்காரர்;

.. அவரிடம் போயும் நான்கேட்டேன்;

செம்பினில் பாலை விட்டபடிச்,

.. சிறியதோர் அலைபே சியிலேதோ

வம்புகள் பேசிச் சிரித்தபடி,

.. "வந்திடும் அந்தப் பொற்காலம்;

கொம்பிலா மாடு குடம்கறக்கும்;

.. குழாயினில் நீரும் வரும்"என்றார்!


4) -- (அறுசீர் விருத்தம் - "விளம் விளம் காய்" என்ற அரையடி வாய்பாடு) --

துணிக்கடைச் சோமுவைக் கேட்டவுடன்,

.. "சொல்லவும் வேண்டுமோ? புடைவைகளை

அணிபவர் நாட்டினில் இலராகி,

.. அரைகுறை ஆடையர் பலராவர்;

கணிப்பொறி வழிமிகப் பொருள்வாங்கிக்

.. கடைகளில் நெரிசலே இலையாகும்;

அணியெனக் கிழிசலே உடுத்துவதால்

.. ஆண்டியும் அரசனும் ஒன்றென்றார்!


5) -- (எண்சீர் விருத்தம் - "விளம் விளம் விளம் மா" என்ற அரையடி வாய்பாடு) --

பள்ளியில் படிக்கிற ஒருவனைக் கேட்டேன்;

.. "படிப்பதும் தேவையோ இருபதி ருபதில்!

உள்ளதெல் லாம்தரும் கூகிளும்; அதனால்

.. உலகினில் நூல்களை வாங்குவோர் இலரே;

கொள்ளையாய்ச் சம்பளம் வந்திடும், சும்மாக்

.. கொழகொழ ஆங்கிலப் பேச்சுவந் தாலே!

எள்ளுவர் என்பதால் தமிழினில் பேச

.. எவருமே தயங்கிடும் காலம்"என் றானே!


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


G.5 - தொலைக்காட்சித் தொடர்கள் - (வெண்பா - அந்தாதி)

G.005

2006-11-30

G.5 - தொலைக்காட்சித் தொடர்கள்

-------------------------------------

(வெண்பா - அந்தாதி)

1)

அழுகைத் தொடரைப்போய் ஆனந்தம் என்பார்;

இழுத்(து)இழுத்துச் சோதிப்பார்; இந்தக் - கழுத்தறுப்பைக்

கண்டு மகிழ்ச்சிக் கடலில் திளைக்கின்றார்

பெண்டுகள் பித்துப் பிடித்து.


2)

பிடித்த தொடரில் பிலாக்கணம் கேட்டு

முடிப்பார் முதலில்;பின் சோறு - வடித்திடச்

செல்வார் சிலர்;என்ன செய்வது, தற்காலத்(து)

இல்வாழ்க்கைக் காட்சி இது.


3)

இதற்குப் பிற(கு)என்ன என்(று)அறிய ஆவல்;

அதன்தொடர்ச்சி கண்டால் அதிலும் - முதல்நாள்

அழுகை தொடர்ந்துவரும்; ஐயகோ ஏன்தான்

இழுக்கின்றார் இவ்வா(று) இவர்.


4)

இவரைக் கொலைசெய்வோம் இவ்வாறு; வஞ்சித்(து)

அவளை அழிக்கலாம் அவ்வா(று); - அவமே

தொடர்ந்து வழங்கும் தொலைக்காட்சி காட்டும்

தொடர்களெலாம் நின்றால் சுகம்.


(அவம் - கேடு; பயனின்மை;)


5)

சுகமான வாழ்க்கை, தொடர்கள் இரவு

பகலாய் வருவதென்றார் பக்கத்(து) - அகத்துத்

தலைவி; அவள்கணவர் தாங்க முடியாத்

தலைவலி என்றார் தனக்கு.


6)

தனக்குத் தனித்தொலைக் காட்சியைத் தந்தால்

மனக்கவலை இன்றி மகிழ்ந்து - தினந்தோறும்

இட்டம்போல் பார்த்திடுவேன் எல்லாத் தொடர்களையும்

பட்டணத்துப் பெண்சொன்னாள் பார்.


7)

பார்க்கும் தொடரிலெலாம் பற்றாக் குறைசிரிப்பே;

ஈர்ப்ப(து) அழுகைஒன்றே இங்குப்போல்; - சேர்த்துவைக்கும்

மாமியா ரோடு மருமகளை; ஓலங்கள்

தாமிணைக்கும் என்றால் சகி.


(சகித்தல் - தரித்தல் - பொறுத்தல்).


8)

சகிப்பைப் பெருக்கத் தமிழ்த்தொலைக் காட்சி

மகிழ்ச்சி துளியும் வழங்கா - நிகழ்ச்சி

பலவும் தொடர்ந்து படைக்கும்; அழுகை

விலைகொடுத்து வாங்குகிறோ மே.


9)

மேதினியில் மாதர் விரும்பும் தொடர்களில்

பாதிக்கும் மேலே படுஅழுகை - மீதியில்

காதிலே பூச்சுற்றும் காட்சிகள்; காணாத

போதிருக்கும் நிம்மதி போல்.


(போல் - அசைச் சொல்).


10)

நிம்மதி என்னும் நிகழ்ச்சி கெடுத்திடும்

நம்மன நிம்மதியை; நல்லவராய்ச் - செம்மனப்

பெண்களாய்க் காட்டும் பெருந்தொடர் காண்பதென்(று)என்

கண்கள்தாம்? போது(ம்)அழு கை.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...