G.002
2006-06-18
G.2 - ஒரு கணக்கு ஆசிரியரின் புலம்பல்
------------------------------------------
(கூவிளங்காய் கூவிளம் தேமா கருவிளம் கூவிளம் தேமாங்காய்)
கூட்டியபின் வந்ததைக் கூறென்(று) இயம்பினேன்; குப்பையே என்கின்றான்;
ஏட்டினிலே உள்ளதைச் சொல்லென்(று) இயம்பினேன்; ஓர்நறுக்(கு) என்கின்றான்;
காட்டுகிறான் சங்கரன் ஏற்றை விடைதனைக் காட்டிடு நீயென்றால்;
வாட்டிவதை மாணவர் இல்லா வகுப்பது வாய்த்திடு நாளென்றோ?
கூட்டியபின் வந்ததைக் கூறு என்று இயம்பினேன் - கூட்டியபின் வந்தது என்ன என்று சொல் என்றேன்; (கூட்டுதல் - 1. To add, sum up; தொகைகூட்டுதல். / 2. To gather up with a broom; துடைப்பத்தாற் பெருக்குதல்.)
குப்பையே என்கின்றான் - குப்பைதான் என்கின்றான்;
ஏட்டினிலே உள்ளதைச் சொல் என்று இயம்பினேன் - (உன்னுடைய) ஏட்டில் உள்ளதைச் சொல் என்றேன்; (ஏடு - 1. புத்தகம்; book; notebook; / 2. Strip of palmyra leaf for writing; பனையோலையிதழ்; Section of a plantain leaf cut near the base, for use as a plate; வாழையிலைத்துண்டு. )
ஓர் நறுக்கு என்கின்றான் - ஒரு நறுக்கு என்கின்றான்; (நறுக்கு - Piece cut off; துண்டு.)
காட்டுகிறான் சங்கரன் ஏற்றை, விடைதனைக் காட்டிடு நீ என்றால் - விடையைக் காட்டு என்றால் சிவபெருமான் வாகனமாகிய எருதைக் காட்டுகின்றான்; (விடை - 1. answer; / 2. Bull; எருது;)
வாட்டி வதை மாணவர் இல்லா வகுப்பது வாய்த்திடு நாள் என்றோ - (இப்படி) வாட்டி வதைக்கின்ற மாணவர்கள் இல்லாத வகுப்பு என்றுதான் கிட்டுமோ?!
குறிப்பு: இது வக்கிரோக்தி என்ற அணி.
வக்கிரோக்தி - n. < vakrōkti. (Rhet.) A figure of speech in which a repartee is based on a double entendre; சொன்ன சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கொண்டு மறுமொழி உரைப்பதாகிய அணி.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment