Friday, March 28, 2025

G.14 - உள்ளமெனுமூடகம் - கவியரங்கம்

G.014

இப்பாடல் 2016-இல் எழுதப்பட்டது.


2016-11-25

G.14 - உள்ளமெனுமூடகம் - கவியரங்கம்

-------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


முற்குறிப்பு: சந்தவசந்தக் கவிதை அரங்கம்-1 - தலைப்பு - "உள்ளமெனும் ஊடகம்";

அதனைச் சந்தியோடு நோக்கினால், "உள்ளமெனுமூடகம்"! இச்சொற்றொடரை இருவிதமாகப் பிரிக்கலாம்!

உள்ளமெனுமூடகம் = 1. உள்ளமெனும் ஊடகம் / 2. "உள்ளம் எனும் மூடு அகம்";

மூடுதல் - மறைத்தல் - To hide, to obscure; அகம் - இடம் - Place;)


1)

உள்ளத் தினிற்கறுப்பை ஒளித்துவைத் தோயாமல்

கள்ளத் தனம்செய்யும் கையர்கள் ஆள்கின்றார்

எள்ளத் தனையுமுண்மை இலார்ஒழிந்து நாடுய்ய

வெள்ளத் தினையடைத்த விரிசடையன் அருள்கவே.


பதம் பிரித்து:

உள்ளத்தினில் கறுப்பை ஒளித்துவைத்து, ஓயாமல்

கள்ளத்தனம் செய்யும் கையர்கள் ஆள்கின்றார்;

எள்ளத்தனையும் உண்மை இலார் ஒழிந்து, நாடு உய்ய,

வெள்ளத்தினை அடைத்த விரிசடையன் அருள்கவே.


கறுப்பு - வஞ்சனை;

கையர் - கீழோர்;

எள்ளத்தனையும் - எள்ளளவும்; சிறிதளவும்;


2)

தமிழெங்கள் மூச்சென்பார் தயங்காமல் வெறுப்புகளை

உமிழுஞ்சொல் உரைத்திடுவார் அவர்நடத்தும் ஊடகத்தில்

அமிழுந்தான் ஆங்கிலத்தில் அத்தமிழும் இதுமாறக்

கமழ்கொன்றைச் சடையனருட் கண்கொண்டு நோக்குகவே.


பதம் பிரித்து:

"தமிழ் எங்கள் மூச்சு" என்பார்; தயங்காமல் வெறுப்புகளை

உமிழும் சொல் உரைத்திடுவார்; அவர் நடத்தும் ஊடகத்தில்,

அமிழும்தான் ஆங்கிலத்தில் அத்-தமிழும்; இது மாறக்,

கமழ்-கொன்றைச் சடையன் அருட்கண்கொண்டு நோக்குகவே.


ஊடகம் - Media (such as TV, Radio, Magazines, Newspapers);


3)

சாதிப்பேர் நீக்கென்பார் சாதிவெறி வளர்த்திடுவார்

பாதிப்பால் நாடழியப் பார்த்திருப்பார் மேன்மேலும்

ஊதிப்பேர் பெறுவாரிப் பிணிநீங்கி நாடுய்யப்

பாதிப்பெண் ஆனமுக்கட் பரமனருள் புரிகவே.


பதம் பிரித்து:

"சாதிப்பேர் நீக்கு" என்பார்; சாதிவெறி வளர்த்திடுவார்;

பாதிப்பால் நாடு அழியப் பார்த்திருப்பார்; மேன்மேலும்

ஊதிப், பேர் பெறுவார்; இப்-பிணி நீங்கி நாடு உய்யப்,

பாதிப்-பெண் ஆன முக்கட்-பரமன் அருள்புரிகவே.


4)

புதுமைகள்செய் வோமென்பார் பொதுச்சொத்தை அபகரிப்பார்

மதுவகைகள் மிகவிற்று மக்களுடல் நலம்கெடுப்பார்

இதுவுமிவர் இயல்பாகும் இன்னார்போய் நாடுய்ய

மதுரமொழி மலைமங்கை மணவாளன் அருள்கவே.


பதம் பிரித்து:

"புதுமைகள் செய்வோம்" என்பார்; பொதுச்சொத்தை அபகரிப்பார்;

மதுவகைகள் மிக விற்று, மக்கள் உடல்நலம் கெடுப்பார்;

இதுவும் இவர் இயல்பு ஆகும்; இன்னார் போய் நாடு உய்ய,

மதுரமொழி மலைமங்கை மணவாளன் அருள்கவே.


அபகரித்தல் - கவர்தல் (plunder);

இன்னார் - 1. இத்தகையோர்; 2. பகைவர்;

போய் - ஒழிந்து; நீங்கி;

மதுரமொழி மலைமங்கை மணவாளன் - இனிய மொழி பேசும் உமைக்குக் கணவன் - சிவபெருமான்;


5)

நஞ்சைச்சொல் வைத்தநய வஞ்சகர்கள் நெறிபிறழார்

அஞ்சப்பல் லின்னல்கள் அவர்க்கிழைத்து நாட்டுக்குக்

கிஞ்சித்தும் நன்மைசெயாக் கிராதர்கள் தங்களது

நெஞ்சத்தை வஞ்சத்தை மூடகமென் றறிவோமே.


பதம் பிரித்து:

நஞ்சைச் சொல் வைத்த நயவஞ்சகர்கள், நெறி-பிறழார்

அஞ்சப் பல்-இன்னல்கள் அவர்க்கு இழைத்து நாட்டுக்குக்

கிஞ்சித்தும் நன்மை செயாக் கிராதர்கள், தங்களது

நெஞ்சத்தை வஞ்சத்தை மூடு-அகம் என்று அறிவோமே.


நயவஞ்சகர் - இனிமைகாட்டி ஏமாற்றுபவர்;

நெறி பிறழார் - நேர்மை வழுவாத நல்லவர்கள்;

கிஞ்சித்தும் - கொஞ்சமும்;

கிராதர் - கொடியவர்;

வஞ்சத்தை மூடு அகம் - வஞ்சனையை மறைத்துவைத்திருக்கின்ற இடம்;


6)

பொருளாரும் வழியென்று பொல்லாத வழியோடும்

இருளார்ந்த உள்ளத்தில் எருதேறும் எம்பெருமான்

அருளார்ந்த கண்ணுடைய அப்பனவன் பெயர்பதிந்தால்

தெருளாரும் ஒளியாரும் திருமலியும் நிலைதானே.


பதம் பிரித்து:

பொருள் ஆரும் வழி என்று பொல்லாத வழி ஓடும்

இருள் ஆர்ந்த உள்ளத்தில், எருது ஏறும் எம்பெருமான்,

அருள் ஆர்ந்த கண்ணுடைய அப்பன்-அவன் பெயர் பதிந்தால்,

தெருள் ஆரும், ஒளி ஆரும், திரு மலியும் நிலைதானே.


ஆர்தல் - மிகுதல்; நிறைதல்;

இருள் - கறுப்பு; வஞ்சனை; அறியாமை;

தெருள் - அறிவின் தெளிவு; ஞானம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...