G.012
இப்பாடல் 2014-இல் எழுதப்பட்டது.
சந்தவசந்தக் கவியரங்கம்-40 -
"எனக்குப் பிடித்த ...." என்ற தலைப்பு.
2014-04-12
G.12 - எனக்குப் பிடித்தது - கவியரங்கம் - 40
-------------------------
0-1) ---- இறைவணக்கம் --- (அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு) --
படித்த படிப்பின் பயனெல்லாம் .. பணத்தைத் திரட்ட என்றபித்துப்
பிடித்து நாளைக் கழிக்கின்ற .. பேதை மார்கள் காலமிதில்,
துடித்த தேவர் ஓடிவந்து .. துதிக்கக் கடலின் நஞ்சுண்டாய்,
அடித்த லத்தை ஆதரிக்கும் .. அகமெ னக்குத் தந்தாயே!
நஞ்சுண்டாய் - நஞ்சை உண்டவனே;
("துடித்த தேவர் ஓடிவந்து துதிக்கக் கடலின் நஞ்சுண்டாய்" - என்ற அடியை முதலிற்கொண்டு பொருள்கொள்க.)
0-2) -- இறைவணக்கம் --- (கலிவிருத்தம் - "மா மா விளம் காய்" - வாய்பாடு) --
அலையார் சடையா அம்மலர்த் தாள்போற்றி
தலைமா லையணி தலைவனே தாள்போற்றி
சிலையால் எயில்கள் செற்றவா தாள்போற்றி.
தொலையாச் செல்வா தூமலர்த் தாள்போற்றி
அம் - அழகிய;
சிலை - வில்;
எயில் - கோட்டை;
0-3) -- அவை வணக்கம் -- (அறுசீர் விருத்தம் - "மா மா மா மா மா காய்" - வாய்பாடு) --
கொன்றை சூடும் கூத்தன் கழலைக் கும்பிட் டும்முன்னே
என்றன் விருப்பில் ஒன்றைப் பாட்டில் இயம்ப ஆசைகொண்டேன்
மன்றில் திரண்டி ருக்கும் அன்பீர் வணங்கி மகிழ்கின்றேன்
இன்று சொல்லும் இதனிற் குறைகள் இருப்பின் உரைப்பீரே.
எனக்குப் பிடித்தது
-------------------------
(மண்டலித்துவரும் அந்தாதித்தொடை அமைந்த பாடல்கள்)
1) -- அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" - அரையடி வாய்பாடு –
உளமகிழ் கின்ற வற்றுள் .. ஒன்றினை எழுத வந்தேன்;
பளபள வென்றி ருக்கப் .. பலநினை வுகளைத் தேய்த்தேன்;
மளமள வென்று தாளில் .. வரைந்திட அமர்ந்தேன்; ஆனால்
உளறலாய்ப் போகும் என்ற .. உண்மையை உணர்ந்து கொண்டேன்.
2)
கொள்கிற பொருள்கள் வீட்டில் .. குவிந்துகி டப்ப தொத்தே
உள்கிடில் உணர லாகும்; .. உகப்பன எண்ணல் ஆகா;
வெள்கினேன் எவ்வா றொன்றை .. விரும்பிய தென்பேன்; சொன்னால்
எள்குமே என்னை நோக்கி .. ஏனைய விருப்ப மெல்லாம்.
கொள்ளுதல் - விலைக்கு வாங்குதல்; பெறுதல்;
உள்குதல் - சிந்தித்தல்;
உகப்பன எண்ணல் ஆகா - விரும்புவன எண்ணற்றவை;
வெள்குதல் - நாணுதல்;
எள்குதல் - இகழ்தல்;
3) -- அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு --
எல்லா ருக்கும் தெரிந்தவொன்றே .. இப்பி றப்பைத் தந்ததெது
வில்லால் காமன் எய்தகணை .. விளைத்த தென்பர் இவ்வுடலை
வல்லார் அறிவர் வல்வினையால் .. வாய்த்த திந்தப் பிறப்பென்று
பொல்லா ஆசைப் புயலோய்ந்தால் .. புவியில் மீண்டும் பிறவோமே.
4) -- அறுசீர் விருத்தம் - "விளம் மா காய் மா மா காய்" - வாய்பாடு --
பிறவியைக் கொடுக்கும் விருப்பங்கள்; .. பிறந்த பின்னும் பருவத்தின்
உறவினில் உதிக்கும் விருப்பங்கள்; .. உயிரைக் கொள்ளப் பக்கத்தில்
மறலியின் தமர்கள் வந்தாலும் .. மனத்தில் இன்னும் விருப்பங்கள்;
அறவிடல் ஆமோ ஆசைகளை? .. அதற்கோர் வழியும் இங்குண்டோ?
மறலி - யமன்;
அற - முழுதும்;
5) -- அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு --
உண்டென் கின்றார் வள்ளுவரும்; .. ஒருவன் கழலைப் பற்றிவிடில்
விண்டு போகும் பற்றென்றார்; .. மிகவும் எளிய வழிபோலக்
கண்டும் வாழ்வில் கடைப்பிடிக்கக் .. கருது வார்கள் மிகச்சிலரே;
தொண்டு பட்டார் தொடர்பிருந்தால் .. சுலப மாகப் பெறலாமே.
விண்டு - நீங்கி; (விள்ளுதல் - நீங்குதல்);
தொண்டுபட்டார் - தொண்டுசெய்யும் அடியவர்கள்;
6) -- கலிவிருத்தம் - "மா மா மா விளம்" - வாய்பாடு) --
பெறலாம் மண்ணிற் பெரிதும் நயந்தன;
சிறவா வினைபோய்ச் சேமம் எய்தலாம்;
நறவார் தமிழாம் நாவுக் கரசர்சொல்
மறவா மனத்தார்க் கருங்காப் பாலனே.
நயந்தன - விரும்பியன;
சிறவா வினை - சிறத்தல் இல்லாத வினை - தீவினை;
சேமம் - க்ஷேமம் - நல்வாழ்வு; பாதுகாவல்;
நறவு ஆர் தமிழ் ஆம் நாவுக்கரசர் சொல் - தேன் பொருந்திய தமிழான அப்பர் தேவாரத்தை;
மறவா மனத்தார்க்கு அருங்-காப்பு ஆலனே - மறத்தல் இன்றி எண்ணும் (/ ஓதும்) மனம் உடையவர்களுக்கு கல்லாலின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி அரிய பாதுகாவல் ஆவான்; (ஆலன் - கல்லால-மரத்தின்கீழ் இருப்பவன்);
**7**) -- திருநாவுக்கரசர் தேவாரம் - திருநேரிசை - 4.67.9.
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு(ம்) மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
வி. சுப்பிரமணியன்
------------- -------------