G.009
2006-03-26
G.9 - "எதிரொலி" (echo verse)
---------------
( முற்குறிப்பு - எதிரொலிக் கவிதை - பாடலில் ஒரு வினா இருக்கும். பாடலின் இறுதியில் உள்ள சொல்லோ சொற்றொடரோ அந்த வினாவிற்கு விடையாக அமையும். குறள்-வெண்பாவில்தான் பாடல் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளாகவும் இருக்கலாம். நூற்பாக்கள் போல ஓரடியாகவும் இருக்கலாம்.
In English (and probably other western languages): Echo verse - is a type of verse in which repetition of the end of a line or stanza imitates an echo.)
1)
ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் எந்நாளும்
தோளில் இதுதரிப்ப துண்டு.
(துண்டு)
2)
மெல்லமெல்ல ஏன்நம் வியாபாரம் வீழ்ந்தது
சொல்லென்றால் என்னஉத் தரம்?
(உத்தரம் - மறுமொழி)
(தரம்)
3)
சிவன்விரும்பி ஏறுவது செப்புக என்றால்
அவன்சொன்ன(து) என்ன விடை?
(விடை - எருது)
4)
அரைநொடியில் நீர்சொல்வீர் பார்வதிக்(கு)இன் னோர்பேர்
உரையுமென்று கேட்டால் உமை
(உமை - உம்மை - உங்களை);
(உமை - உமாதேவி)
5)
அழுததும் அம்மையப்பர் பாலூட்டக் கையால்
தொழுதெடுத்தார் ஆனந்தத் தோடு.
(தோடு (உடைய செவியன்))
6)
இரவில் வெளிச்சம் இருப்பதெவ் வாறோ?
உரைத்திட வேண்டும் மதி.
(மதி - அறிவு);
(மதி - சந்திரன்)
வி. சுப்பிரமணியன்
------------- -------------